செய்திகள்
கொலை

கொடைக்கானல் அருகே அரசு பள்ளியில் விவசாயி அடித்து கொலை

Published On 2019-10-25 06:46 GMT   |   Update On 2019-10-25 06:46 GMT
கொடைக்கானல் அருகே அரசு பள்ளியில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே உள்ள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). விவசாயி. இவரது மகன் சிவமுருகன் (15). அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (48) என்பவரது மகன் உமாநாத் (15). சிவமுருகனும், உமாநாத்தும் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேற்று காலையில் இருவரும் சாப்பிடாமல் பள்ளிக்கு சென்று விட்டனர். இதனையடுத்து லோகநாதனும், முருகனும் தங்களது மகன்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றனர்.

அப்போது லோகநாதனும், முருகனும் தங்களது மகன்களை சாப்பிடாமல் ஏன் பள்ளிக்கு வந்தாய்? என கண்டித்தனர். அப்போது முருகனுக்கும், லோகநாதனுக்கும் இடையே தகராறு உண்டானது.

இதனால் முருகன் ஆத்திரமடைந்து லோகநாதனை தாக்கி கீழே தள்ளினார். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மன்னவனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.

வழியிலேயே லோகநாதன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லோகநாதன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொடைக்கானல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News