உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகளை வெளியேற்றிய போலீசார்

Published On 2024-05-16 11:45 IST   |   Update On 2024-05-16 11:45:00 IST
  • பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.
  • வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டிவதைத்து வந்தது. இதனால் புதுச்சேரியில் 100.4 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசியது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. கிராமப்புறங்களில் மழை அதிகம் பெய்ததால் மழை நீர் பல இடங்களில் தேங்கி நின்றது. இந்த மழை நகர்ப்புற மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

அதிகாலை முதல் புதுச்சேரி நகரப் பகுதியான கடற்கரை சாலை, உப்பளம், முத்தியால்பேட்டை, முதலியால்பேட்டை, புதிய பஸ் நிலையம் மற்றும் கிராமப் பகுதிகளான வில்லியனூர், பாகூர், திருக்கனூர், கன்னியகோவில், காலாப்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் கோடை விடுமுறையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்கள் வெளியில் மழையில் நனைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மழையின் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.

இதற்கிடையே லேசான கடல் சீற்றம் இருந்த புதுச்சேரி கடற்கரையில் கடலில் இறங்கி விளையாடிய சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் அங்கிருந்து வெளியேற்றினர். 

Tags:    

Similar News