செய்திகள்
தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை- வெள்ளக்கோவில் சாமிநாதன் விளக்கம்
இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து எனது பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை என்று வெள்ளக்கோவில் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பூர்:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியானது.
இளைஞரணி செயலாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற போது கூறியதாவது:-
எனது பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. இது குறித்து நான் எந்த கடிதமும் தலைமைக்கு அனுப்பவில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என்றார்.