திருமங்கலத்தில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள பி.அம்மாபட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் நர்சிங் படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு திருமங்கலத்தில் ஒரு ஜோதிட நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் இளம்பெண் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாயமான இளம்பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில், ஜோதிட நிலையம் அமைந்துள்ள பகுதியில் டீக்கடையில் வேலை பார்த்த மணிகண்டன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறினார்.
அதனை நம்பி அவருடன் சென்ற என்னை வீட்டின் மாடி அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் மணிகண்டனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.