செய்திகள்
கோப்புப்படம்

கூடலூரில் இன்று காலை காட்டுயானை தாக்கி வாலிபர் பலி

Published On 2019-06-11 04:22 GMT   |   Update On 2019-06-11 04:22 GMT
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இன்று காலை காட்டுயானை தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலாஅட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்வாகனம். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 21). கூலித்தொழிலாளி. வழக்கம்போல் இன்று காலை கார்த்திகேயன் மற்றும் சிலர் வேலைக்கு புறப்பட்டனர்.

தேவர்அட்டி அந்தோணி கடை என்ற இடத்தில் சென்றபோது புதர்மறைவில் இருந்து ஒற்றை காட்டுயானை தொழிலாளர்களை விரட்டியது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர்.

இதில் கார்த்திகேயன் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை விடாமல் யானை துரத்தி தந்தத்தால் கழுத்தில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் அலறி சத்தம்போட்டார். சிதறி ஓடிய சக ஊழியர்கள் திரும்பி வந்து பார்த்தனர். யானையை சத்தம்போட்டு விரட்ட முயன்றனர். ஆனால் அவர்கள் கண்முன்னே யானை கார்த்திகேயனை மிதித்து நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் கார்த்திகேயன் பலியானார்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் கார்த்திகேயனின் உடல் அருகிலேயே யானை நின்றது. நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பின்னர் கார்த்திகேயனின் உடலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காட்டுயானை தாக்கி வாலிபர் இறந்த தகவல் கிடைத்ததும் அந்த கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது. கிராம மக்கள் வேலைக்கு செல்லாமல் கார்த்திகேயனின் வீட்டில் குவிந்தனர். யானை நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News