பழனி அருகே 13 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது
பழனி:
பழனி அருகே உள்ள சின்னகலையம்புத்தூர் ஊராட்சியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்தனர். இதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன்தான் காரணம் என கூறினார்.
ஆனால் பள்ளியில் சென்று விசாரித்த போது மாணவி தெரிவித்த பெயரில் எந்த மாணவனும் இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து தாசில்தார் பழனிச்சாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பழனி பகுதியைச் சேர்ந்த காமராஜ் (55) என்ற தொழிலாளிதான் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.