செய்திகள்

பேனர் வைக்கும்போது தவறி விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On 2019-03-09 16:25 GMT   |   Update On 2019-03-09 16:26 GMT
சிவகாசி அருகே பேனர் வைக்கும்போது தவறி விழுந்து இறந்த சிறுவன் குடும்பத்துக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார். #MinisterRajendraBalaji
விருதுநகர்:

சிவகாசி அருகே உள்ள ஆமத்தூரைச் சேர்ந்தவர் வீரம்மாள். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் மாடசாமி (வயது 15) படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு பிளக்ஸ் போர்டு, கட்சி கொடிகள் கட்டும் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் டி.டி.வி. தினகரன் பங்கேற்ற அ.ம.மு.க. கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் தினகரனை வரவேற்பதற்காக மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்தபின் மாடசாமி பிளக்ஸ் போர்டுகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது ரெங்கபாளையம் என்ற இடத்தில் இருந்த பிளக்ஸ் போர்டை எடுப்பதற்காக சாரம் மீது ஏறியபோது மாடசாமி தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, மாடசாமியின் வீட்டிற்கு சென்று அவரது தாயாருக்கும், குடும்பத்திற்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தலைவர் ரமணா உள்பட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர். #MinisterRajendraBalaji
Tags:    

Similar News