செய்திகள்
டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது எடுத்த படம்.

குட்கா ஊழல் அமைச்சர்- டி.ஜி.பி.யும் நீதிமன்ற நடவடிக்கை மூலம் பதவி விலகுவார்கள்: டிடிவி தினகரன்

Published On 2018-09-24 10:24 GMT   |   Update On 2018-09-24 10:24 GMT
குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கை மூலமே பதவி விலகுவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #GutkhaScam #TTVDhinakaran
சுவாமிமலை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று (24-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நாகை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குகிறார்.

கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அம்மாவின் அரசு என்று கூறி ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி ஆட்சியில் 33 அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது அ.தி.மு.க.வின் ஊழல் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடமே இருக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும். நீர்ப்பாசனத்தை சீர் செய்தாலே விவசாயிகள் தற்கொலை முற்றிலும் தவிர்க்கப்படும்.

குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சரோ, டி.ஜி.பி. யோ இதுவரை பதவி விலகவில்லை. நீதிமன்ற நடவடிக்கை மூலமே அவர்கள் பதவி விலகுவார்கள்.

கருணாஸ் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக கூறி உடனே மன்னிப்பு கோரினார். ஆனால் இந்த அரசாங்கம் கருணாசுக்கு ஒரு நிலைப்பாடு, எச். ராஜா, எஸ்.வி. சேகருக்கு ஒரு நிலைப்பாடு கொண்டுள்ளது. இது அடிமை அரசாங்கம் என்பது தான் உண்மை.

திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அறிவிக்கப்பட்டு விவசாயமும் விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில்களை மட்டுமே நடைபெற வேண்டும். ஏற்கனவே உள்ள திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தினாலும், ஊழலை தடுத்தாலும் அதிக விவசாய பிரச்சனைகள் தீர்த்து விடலாம்.

நீர் ஆதாரங்களை சரிவர செயல்படுத்தி ஆறு, குளங்களை சீர் செய்து மழை காலங்களில் நீரை சேமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான விதை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #TTVDhinakaran
Tags:    

Similar News