செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் போராட்டம் வாபஸ்

Published On 2018-09-18 09:58 GMT   |   Update On 2018-09-18 09:58 GMT
பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவுகள் அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய மீனவர்கள் தங்கள் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர். #Pazhaverkadu #FishermenProtest
பொன்னேரி:

பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், அங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் நேற்று படகில் கருப்புக் கொடி காட்டியபடி முகத்துவாரத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முகத்துவார பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். அமைச்சர் மற்றும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இரண்டாவது நாளாக இன்றும் பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடும்பத்துடன் பழவேற்காடு பஜாரில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பழவேற்காடு, ஆரம்பாக்கம், கோட்டை குப்பம், வைரங்குப்பம், கரிமணல், பசியாவரம் உள்ளிட்ட 100 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினார். முகத்துவாரத்தை தூர்வார அரசிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

மீனவர்கள் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #Pazhaverkadu #FishermenProtest
Tags:    

Similar News