செய்திகள்

கோவை - நீலகிரி மாவட்டத்தில் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

Published On 2018-04-16 07:31 GMT   |   Update On 2018-04-16 07:31 GMT
கோவை, நீலகிரி மாவட்டத்தில் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கோவை:

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரை பொதுக் கூட்டத்தில் தொடங்கினார். இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக பொதுக் கூட்டங்கள் மூலம் மக்களையும், தொண்டர்களையும் சந்திக்க அவர் திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 3-ந் தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கோவை, நீலகிரி மாவட்டத்தில் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் (மே) 11,12,13 ஆகிய 3 நாட்கள் இந்த சுற்றுப் பயணம் நடக்கிறது. சுற்றுப் பயணத்தின் போது கமல்ஹாசன் நெசவாளர்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்யும் போது தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்க உள்ளார். அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிகிறார்.

மதுரை, திருச்சி பொதுக்கூட்டத்தை போன்று கொங்கு மண்டல தலைநகரான கோவையிலும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த கூட்டம் அடுத்த மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் கமல்ஹாசன் கட்சியில் இணைய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் வரும் வாரங்களில் கட்சியில் இணைவார்கள் என கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட சுற்றுப் பயணம், பொதுக்கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் விரைவில் வெளியிடுவார் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News