செய்திகள்

அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் அரசியல் ரீதியான உறவு கிடையாது - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On 2018-02-18 08:24 GMT   |   Update On 2018-02-18 08:24 GMT
பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் அரசாங்க ரீதியான உறவுதான் உள்ளது. ஆனால் அரசியல் ரீதியான உறவு கிடையாது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
திருச்சி:

திருச்சியில் நடைபெற்ற பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சேர்ந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி இருப்பது யதார்த்தமானது. நிர்வாக ரீதியாக பிரதமர் கூறுவதை நாங்கள் கேட்போம். பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் அரசாங்க ரீதியான உறவுதான் உள்ளது. ஆனால் அரசியல் ரீதியான உறவு கிடையாது.

பா.ஜ.க.வுடன் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து, முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தான் முடிவு செய்வார்கள். காவிரி தீர்ப்பு குறித்து ரஜினியும், கமலும் தெரிவித்து இருப்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து. காவிரி தீர்ப்பு குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் மாநாட்டில் பேசுகையில், ஆவின் நிறுவனம் உண்மையாக உழைக்கக்கூடிய உழைப்பாளிகளை நம்பியே உள்ளது. ஆவின்பால் தாய்ப்பாலுக்கு நிகரானது. தற்போது சிங்கப்பூரில் 50 இடங்களில் ஆவின்பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துபாய், இலங்கை, ஹாங்காங் போன்ற நாடுகளிலும் ஆவின் பால் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஆவின் பாலை அந்த நாடுகளுக்கெல்லாம் அனுப்ப இருக்கிறோம்.

இந்த நிறுவனத்தை அழித்து விடலாம் என சிலர் நினைத்தார்கள். ஆனால் அத்தனையையும் தாங்கிக்கொண்டு இந்த துறையை காப்பாற்றிய உங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவுகளை மானியக்கோரிக்கைக்கு முன்னரோ அல்லது பின்போ அறிவிப்போம். 4 வழிச்சாலைகள் உள்ள இடங்களில் ஆவின் ஹைடெக் பார்லர்களை திறக்க இருக்கிறோம் என்றார். #tamilnews

Tags:    

Similar News