551 மீனவர்களை கண்டுபிடிக்க கோரிய வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த ஆண்டோலெனின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 29-ந்தேதி இரவிலும், மறுநாள் பகலிலும் வந்த ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் 200 படகுகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 42 மீனவ கிராமங்களில் வாழும் 80 ஆயிரம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஒக்கி புயல் தொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரிக்கவில்லை.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு ஒக்கி புயல் தொடர்பாக எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் அவர்கள் புயலில் சிக்கிக்கொண்டனர்.
இவர்களை ஹெலிகாப்டரை அனுப்பி மீட்கும் பணியில் மத்திய-மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 31-ந் தேதியே கடல் பகுதியில் ஹெலிகாப்டரை அனுப்பி மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தால் ஏராளமான மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டிருப்பார்கள்.
மீனவர் கிராமங்களில் டிசம்பர் 3 முதல் 17 வரை ஆய்வு நடத்தியபோது 551 மீனவர்கள் இதுவரை வீடு திரும்பாதது தெரிய வந்தது.
மாயமான மீனவர்களின் நிலை தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். இதனால் ஒக்கி புயலில் சிக்கி மாயமான 551 மீனவர்களையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒக்கி புயலில் சிக்கி 551 மீனவர்கள் மாயமானது தொடர்பாக வருகிற 22-ந் தேதி பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.