செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

Published On 2017-11-30 12:14 GMT   |   Update On 2017-11-30 12:14 GMT
நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

கோவை:

கோவை போத்தனூர் அருகே காமராஜர்புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவர் நேற்று மாலை அவ்வழியாக நடந்து சென்ற கல்லூரி மாணவி பிரியா(19) என்பவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். உடனே அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு செல்போனை பறித்து சென்ற விக்னேசை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை அங்குள்ள ஒரு கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். பெண் ஒருவர் செருப்பாலும் அடித்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விக்னேசை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விக்னேஷ் இதற்கு முன்பு யார்-யாரிடமெல்லாம் செல்போன் பறித்துள்ளார்? நகை பறிப்பு வழக்குகளில் இவருக்கு தொடர்பு உள்ளதா? இவரது கூட்டாளிகள் யார்- யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விக்னேசை கட்டி வைத்து அடிக்கும் காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News