விருதுநகர் அருகே 2 பேர் மர்மச் சாவு: அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக தந்தை-மகன் கைது
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள சோளக்காட்டில் 2 வாலிபர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர்கள் சாத்தூர் அருகே உள்ள சூரக்குடியைச் சேர்ந்த ஞானசேகர் (வயது 33), திலகர் (30) என தெரியவந்தது.
மணல் கடத்தலில் ஈடுபட்ட இவர்கள், போலீசார் வருவதை கண்டு தப்பி ஓடியதாகவும், அப்போது கண்ணாயிரம் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இறந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திலகரின் அண்ணன் பாஸ்கரன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாகவும், போலீசாருக்கு தெரியாமல் ஆதாரங்களை அழித்ததாகவும் தோட்டத்து உரிமையாளர் கண்ணாயிரம் (60), அவரது மகன் உதயகுமார் (24) ஆகியோரை கைது செய்தனர்.