search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mystery died"

    சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உடன்குடி மருத்துவ மாணவி மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகள் உதய பிரியா (வயது23). ஜெய்சங்கர் குடும்பத்துடன் பொள்ளாச்சிக்கு சென்று அங்கு காய்கறி கடை நடத்தி வசித்து வருகின்றனர்.

    உதய பிரியா சென்னை மதுரவாயல் மருத்துவக்கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்தார். இதற்காக அவரை ஜெய் சங்கர் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வரும் தனது சகோதரி அழகுமணி என்பவரது வீட்டில் தங்க வைத்தார். இதைத்தொடர்ந்து உதயபிரியா அங்கிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் உதய பிரியா மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவரது வயிற்றில் கம்பி கிழித்து இறந்து விட்டதாக கூறி அழகுமணி அவரது மகன் சவுந்தரசெல்வன், மகள் சவுந்தர செல்வி ஆகிய 3 பேரும் சேர்ந்து உதய பிரியா உடலை அடக்கம் செய்வதற்காக உடன்குடி புதுமனைக்கு வந்தனர்.

    இந்த தகவல் பொள்ளாச்சியில் வசித்து வரும் உதய பிரியாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஜெய்சங்கர் இது குறித்து உடனடியாக குலசேகரபட்டிணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அப்போது அவர் எனக்கு தெரியாமல் எனது மகளை அடக்கம் செய்ய முயற்சி செய்கின்றனர். எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினார். அவரது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குலசேகரபட்டினம் போலீசார் அழகுமணி குடும்பத்தாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் பலியான உதய பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது வயிற்றில் கம்பி கிழித்ததால் பலியானது என தெரியவந்தது. இந்நிலையில் உடன்குடிக்கு வந்த ஜெய் சங்கர் தனது மகள் இறந்த தகவலை என்னிடம் கூறாமல் எனது சகோதரி குடும்பத்தினர் அடக்கம் செய்ய முற்பட்டுள்ளனர்.

    எனவே அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என புகார் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதய பிரியா மாடியில் இருந்து விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து உதய பிரியாவின் உடல் நேற்றிரவு அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×