திருவள்ளூர் அருகே குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பொதுமக்கள் பாதிப்பு
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ம.பொ.சி. நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இரண்டு நாளுக்கு ஒரு முறை ஊராட்சி மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
தற்போது குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால் குடிநீர் துர்நாற்றம் வீசுவதுடன் பிடித்து வைக்கும் பாத்திரங்களும் நாற்றம் அடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குடிநீரை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
தரமான குடிநீரை குழாய் மூலம் வழங்க வேண்டும். தற்போது கழிவுநீர் கலந்து குடிநீர் வருகிறது.
இது குறித்து திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்ட பிறகு ஆய்வுக்காக இந்த தண்ணீரை கொண்டு சென்றனர். இந்த நீரை குடிக்க தரமில்லை என சான்றிதழ் கொடுத்தும் அந்த தண்ணீரே மீண்டும் வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.