செய்திகள்

தொடர் மழை: புதுவையில் ஏரிகள் நிரம்பின

Published On 2017-11-11 07:34 GMT   |   Update On 2017-11-11 07:34 GMT
புதுவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடந்த 10 நாட்களாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் தொடர் மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன.
புதுச்சேரி:

புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டியது. இதனால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.

மேலும் தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. பலத்த மழையால் பல இடங்களில் தாழ்வான பகுதி குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான சாலைகள் சேதமாகி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

புதுவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடந்த 10 நாட்களாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் தொடர் மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. குறிப்பாக பாகூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

சித்தேரி, மணப்பட்டு ஏரி, சேலியமேடு ஏரி, பின்னாச்சிகுப்பம் ஏரி, குருவிநத்தம் ஏரி, இருளன்சந்தை ஏரி, சோரியாங்குப்பம் ஏரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உள்ளன.

மேலும் தொடர்ந்து மழை பெய்தால் ஏரிக்கரைகள் உடையாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News