செய்திகள்

நேரு பூங்காவில் இருந்து சென்ட்ரலுக்கு மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மினி பஸ் இணைப்பு வசதி

Published On 2017-10-13 07:17 GMT   |   Update On 2017-10-13 07:17 GMT
நேரு பூங்காவில் இருந்து சென்ட்ரலுக்கு எளிதில் செல்ல மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக மினி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்காவரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

மெட்ரோ ரெயில் சேவைக்கு பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளதையொட்டி சென்னை மாநகரம் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நேரு பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர், சென்ட்ரல் செல்லும் பணிகளுக்காக தற்போது மினி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. எஸ்.96 என்ற எண் கொண்ட மினி பஸ்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில் பயணிகள் இந்த மினி பஸ்களில் ஏறி எழும்பூர், சென்ட்ரலை எளிதில் அடையலாம்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக நேரு பூங்கா- எழும்பூர், சென்ட்ரலுக்கு மினி பஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த பஸ் மூலம் எளிதில் சென்றடையலாம். மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்தும் மினி பஸ் வசதி ஏற்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையம், வட பழனி, கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச பேட்டரி கார் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News