செய்திகள்

கல்வராயன்மலை அருகே காதல் திருமணம் செய்த பெண் கொடூர கொலை: குழந்தையுடன் கணவர் ஓட்டம்

Published On 2017-09-24 09:46 GMT   |   Update On 2017-09-24 09:46 GMT
கல்வராயன்மலை அருகே காதல் திருமணம் செய்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கச்சிராயப்பாளையம்:

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள கரியாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 28). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இதே ஆஸ்பத்திரியில் நெல்லையை சேர்ந்த நெப்போலியன் (34) என்பவரது அக்காளும் பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி நெப்போலியன் சென்று வந்தார்.

அப்போது ராஜேஸ்வரிக்கும், நெப்போலியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் நெப்போலியன் கரியாலூரில் சைக்கிள் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது ராஜேஸ்வரி ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு செல்லாமல் மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு நெப்போலியன் மது குடித்து விட்டு ரோட்டில் சென்றவர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதையறிந்த ராஜேஸ்வரி அங்கு சென்று ரோட்டில் தகராறு செய்து கொண்டிருந்த கணவரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

பின்னர் இருவரும் வீட்டில் படுத்து தூங்கி விட்டனர். இன்று காலையில் ராஜேஸ்வரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் அருகே இருந்தவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது.

பின்னர் அந்த வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்த போது ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு, நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இது குறித்து கரியாலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று வீட்டில் பிணமாக கிடந்த ராஜேஸ்வரியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவு ராஜேஸ்வரிக்கும், நெப்போலியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த நெப்போலியன் மனைவி ராஜேஸ்வரியை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளார்.

அதன் பின்னர் ராஜேஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்தும், உடல் முழுவதும் கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தனது 2 வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது தெரியவந்தது.

அவர் மோட்டார் சைக்கிளில் சேலத்துக்கு சென்று இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து நெப்போலியனை பிடிக்க போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.

காதல் திருமணம் செய்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News