செய்திகள்

முதலமைச்சர் பழனிச்சாமி அரசின் அவைத் தலைவராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்படுகிறார் - டிடிவி தினகரன்

Published On 2017-09-19 13:52 GMT   |   Update On 2017-09-19 13:52 GMT
திருச்சியில் நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் பேசிய டிடிவி தினகரன், முதலமைச்சர் பழனிச்சாமி அரசின் அவைத் தலைவராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

திருச்சி:

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் பேசியதாவது:-

தமிழக அரசு தவறான வாக்குறுதிகளை அளித்து, மாணவி அனிதாவின் உயிரை பறித்துவிட்டது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தார். அவசர சட்டம் மூலம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு, மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

நியாயம் கேட்ட 18 எம்எல்ஏக்களை, பழிவாங்கும் விதமாக தகுதி நீக்கம் செய்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது தவறு என்பதை நீதிமன்றத்தில் நாங்கள் நிரூபிப்போம். 

சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராக்கிவிட்டு சென்றிருக்க முடியும். தமிழக மக்கள் துரோக கும்பல் ஆட்சியில் இருக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதிமுகவின் பிரதான எதிரி திமுக என்பது ஏழரைகோடி தமிழர்களுக்கும் தெரியும்.

ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயல்பாட்டில் சந்தேகம் எழுகிறது. முதலமைச்சர் பழனிசாமி அரசின் அவைத் தலைவராக, ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்படுகிறார். பெரும்பான்மையை நிருபிக்க ஆளுநர் முதல்வருக்கு உத்தரவிட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு செல்லும் காலம் வந்துவிட்டது. தேர்தல் எப்போது வந்தாலும் வென்று எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News