எனக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் என் வெற்றிக்கு பாடுபட்டவர்கள்: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
பொள்ளாச்சி:
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்வரை அவமரியாதையாக திமுக செயல்த லைவர் மு.க.ஸ்டாலின் பேசியதற்காக நான் சில கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர் பொள்ளாச்சி ஜெயராமன் கருத்துக்கு பதில் தெரிவித்தால் தரம் தாழ்ந்து விடும் என தெரிவித்துள்ளார்.
பல முறை சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எனது கேள்விக்கு அவர் பதில் தந்துள்ளார். ஸ்டாலின் கேள்விக்கு நானும் பதில் தந்துள்ளேன். அப்போதெல்லாம் அவரது தரம் தாழ்ந்து போகவில்லையா?
தற்போது ஸ்டாலின் முதல்வர் கனவில் அதிகம் மிதந்து வருவதால் அவருடைய பேச்சுக்கள் அப்படியுள்ளது.
மேலும், எனக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற தி.மு.க.வினர் அனைவரும் எனக்காக தேர்தல் நேரத்தில் பணியாற்றியவர்கள்.
நான் தேர்தலில் போட்டியிடும் போதெல்லாம் எனக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியுள்ளனர். மீண்டும் நான் தேர்தலை சந்திக்கும் போதும் எனக்காக தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகவே கருப்புக்கொடி காட்டிய பொள்ளாச்சி தி.மு.க.வினர் மீது எனக்கு எந்தவித சங்கடமும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.