வாணியம்பாடி போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி பலி
வாணியம்பாடி:
வாணியம்பாடி கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் மீது வாணியம்பாடி டவுன் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால் அடிக்கடி இவரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அன்பு கடந்த 8-ந் தேதி இரவு வாணியம்பாடி நகர் போலீஸ் நிலையத்தை நோக்கி மண்எண்ணெய் கேனுடன் சென்றார். போலீஸ் நிலையம் முன் அவர் திடீரென தான் கொண்டு சென்ற கேனிலிருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றினார். அடுத்த வினாடியே தீ வைத்துக்கொண்டார்.
தீயில் கருகிய அவர் அலறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து அவர் மீது எரிந்த தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் பலத்த மழை பெய்ய தொடங்கியதால் அன்பு மீது எரிந்து கொண்டிருந்த தீ அணைந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை கொட்டும் மழையில் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.