செய்திகள்

திருமாவளவன் பிறந்தநாளுக்கு பணம்கேட்டு துணிக்கடை உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2017-08-23 12:26 GMT   |   Update On 2017-08-23 12:26 GMT
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக துணிக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு தாக்கியதால் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனப்பாக்கம்:
\
பனப்பாக்கம் நெல்லூர் பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது26). இவர் ஓச்சேரி ரோட்டில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 16-ந்தேதி இவரது கடைக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாட பணம் கேட்டனர். ராஜேஷ் பணம் கொடுக்க மறுத்ததால் அவரை தாக்கினர். இந்த சம்பவம் கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

10 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய ஒரு வீடியோ காட்சி கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப், முகநூலில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி ஜவுளிக்கடை உரிமையாளர் ராக்கேஷ் (வயது 26) நெமிலி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பனப்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகம் என்கிற விநாயகமூர்த்தி (32), சேகர் (36) ஆகிய 2 பேரை கைது செய்தார்.

அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், அற்றுமீறி நுழைதல், அச்சுறுத்தல் ஏற்படுத்தியது. கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான விநாயகம், சேகர் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

பனப்பாக்கத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் ராக்கேசை பணம் கேட்டு தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பனப்பாக்கம் நகர துணைச் செயலாளர் விநாயகம் என்கிற விநாயகமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6மாத காலத்துக்கு தலைமையின் ஒப்புதலுடன் நீக்கி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கவுதம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News