நீட் தேர்வு: மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துள்ளது - ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்
சென்னை:
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
‘மாநில வழி பாடதிட்டத்தில் படித்து பிளஸ்2 தேர்வில் 1,148 மதிப்பெண் எடுத்துள்ளேன். மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று ஆவலுடன், ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளேன்.
ஆனால், தமிழக அரசு ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது’.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘நீட்’ விவகாரத்தில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் விளைவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் உறுதியான முடிவை விரைந்து எடுக்காமல், தமிழக அரசு இழுத்தடித்து’ என்று கருத்து தெரிவித்தார்.
பின்னர், மருத்துவ படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் எத்தனை பேருக்கு ‘நீட்’ தேர்வு அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிற்பகலில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.