செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கழுத்தை அறுத்துக்கொலை: மனைவி கைது

Published On 2017-08-23 04:07 GMT   |   Update On 2017-08-23 04:07 GMT
ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்து கள்ளக்காதலன் உதவியுடன் உடலை புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 30). இவருடைய மனைவி இந்து (25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2½ வயதில் ஒரு மகன் உள்ளான். ஜஸ்டின் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஜஸ்டின், குடும்பத்துடன் ஓசூர் வந்தார். ஓசூரில் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். இதற்கிடையே கடந்த 20-ந் தேதி ஜஸ்டின் மாயமானார். மேலும் அவரது வீடு முழுவதும் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் இந்துவிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் மத்தம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இந்து நேற்று சரண் அடைந்தார். தனது கணவரை கள்ளக்காதலன் லிண்டோ (30) உதவியுடன் தான் கொலை செய்து சுடுகாட்டில் புதைத்து விட்டதாக கூறினார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் இந்துவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஜஸ்டினின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிறகு உடலை மருத்துவ குழுவினர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் இந்துவிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

ஜஸ்டினின் மனைவி இந்துவிற்கும், கூடலூரைச் சேர்ந்த லிண்டோவிற்கும் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அவர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே டெல்லியில் இருந்து ஊருக்கு திரும்பிய ஜஸ்டின் தனது மனைவி இந்துவுடன் ஓசூரில் குடியேறினார். அங்கு அவர் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்து தனது கள்ளக்காதலன் லிண்டோவை ஓசூர் வரவழைத்தார்.

கடந்த 20-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் ஜஸ்டினை, கள்ளக்காதலன் உதவியுடன் இந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன்பிறகு காரில் ஜஸ்டினின் உடலை ஏற்றி மத்திகிரி கூட்டுரோட்டில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். இந்த திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தப்பி ஓடிய லிண்டோவை போலீசார் தேடி வருகிறார்கள். 
Tags:    

Similar News