செய்திகள்
சிவ சக்திவேல்

வி‌ஷ வாயு தாக்கி ராணுவ வீரர் பலி - சோகத்தில் மூழ்கிய கடமலைக்குண்டு கிராமம்

Published On 2017-08-17 10:12 GMT   |   Update On 2017-08-17 10:12 GMT
சென்னை அருகே வி‌ஷ வாயு தாக்கி இறந்த ராணுவ வீரரின் சொந்த ஊரான கடமலைக்குண்டு கிராமம் சோகத்தில் மூழ்கியது.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணசாமி. இவரது மகன் சிவ சக்திவேல் (வயது 37). இவருக்கு சுபலெட்சுமி என்ற மனைவியும், சாதனாஸ்ரீ (7) என்ற மகளும், சூர்யபுத்திரன் (4) என்ற மகனும் உள்ளனர்.

சிவசக்திவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் சென்னையில் தங்கி ஆவடியில் உள்ள இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

நேற்று டேங்கர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது வி‌ஷ வாயு தாக்கியது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த ஊரான கடமலைக்குண்டு கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. நேற்று இரவு சிவசக்திவேல் இறப்பு குறித்து அவரது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.



Tags:    

Similar News