செய்திகள்

மதுரை அருகே கல்லூரி மாணவர் கொலை: 7 பேருக்கு வலைவீச்சு

Published On 2017-08-17 07:37 GMT   |   Update On 2017-08-17 07:37 GMT
மதுரை அருகே கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை விரகனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் ராஜா (வயது 21). இவர் மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

கார்த்திக் ராஜாவுக்கும், விரகனூரைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.

நேற்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அப்பகுதி மக்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இன்று காலை 7 மணிக்கு கார்த்திக் ராஜா, விரகனூர் சுற்றுச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் கார்த்திக் ராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.

பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்த கார்த்திக் ராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News