செய்திகள்

மோசடி வழக்கில் 4-வது முறையாக சுகேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

Published On 2017-08-03 06:15 GMT   |   Update On 2017-08-03 06:16 GMT
மோசடி வழக்கு விசாரணையில் 4-வது முறையாக இடைத்தரகர் சுகேஷ் இன்று கோவை கோர்ட்டில் ஆஜர் ஆனர். இதையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.
கோவை:

இரட்டை சிலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இடைத்தரகர் சுகேசை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீது தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன.

கடந்த 2010-ம் ஆண்டு கோவை கணபதியில் சமையல் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்த ராஜவேலு என்பவரிடம் இடைத்தரகர் சுகேஷ் கர்நாடக முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி டெண்டர் எடுத்து தருவதாக ரூ.2½ லட்சம் பணம் பெற்று மோசடி செய்தார்.

இது குறித்து ராஜவேலு கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகேஷ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சந்திர சேகர் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை ஜே.எம்.2 கோர்ட்டில் நடந்து வருகிறது.

விசாரணைக்காக டெல்லி போலீசார் இடைத்தரகர் சுகேசை கடந்த 20-ந்தேதி கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் இன்று ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி சுகேசை 4-வது முறையாக கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்த டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் ரெயிலில் இன்று அதிகாலை கோவைக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சுகேசை கோவை ஜே.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினர்.

இதையடுத்து நீதிபதி ராஜ்குமார் வழக்கின் விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.

இதைதொடர்ந்து சுகேசை பலத்த பாதுகாப்புடன் கோவை ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து ரெயில் மூலம் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Tags:    

Similar News