செய்திகள்

தி.மு.க சார்பாக நடக்கும் மனித சங்கிலி போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் ஆதரவு

Published On 2017-07-25 16:20 GMT   |   Update On 2017-07-25 16:20 GMT
தமிழகத்தில் 27-ந் தேதி நடக்க விருக்கும் மனித சங்கிலி போராட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்:

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர்கள் காவிரி தனபாலன், சுகுமாறன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை தகர்க்கும் வகையில் உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு தெரிவிப்பதுடன் இதில் மாநிலம் முழுவதும் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரவகைகளை பெற ஆதார் அட்டையை பதிவு செய்து கணினியில் கைரேகை பதிவு செய்து உரம் பெறும் முறையை கைவிட வேண்டும். சரக்கு மற்றும் சேவைவரி திட்டத்தில் வேளாண் உற்பத்திக்கான பொருட்களுக்கு வரி விலக்கு செய்தது. ஆனால் கைத் தெளிப்பான், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றுக்கு வரிவிதிப்பு செய்தது விவசாயிகளை மேலும் நலிவடைய செய்யும் செயல் ஆகும். எனவே இந்த வரியை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள பயிர் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை போக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் செய்வதை கண்டிப்பது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 20 கிராமங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது மாநில செயலாளர் ரவீந்திரன், நிர்வாகிகள் ராஜசேகரன், ஆசைத்தம்பி, நீடாமங்கலம் வரதராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடத்தினர்.
Tags:    

Similar News