செய்திகள்
கொள்ளை நடந்த டாக்டர் கஜேந்திரனின் வீடு.

திண்டிவனத்தில் டாக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

Published On 2017-07-22 11:42 GMT   |   Update On 2017-07-22 11:42 GMT
திண்டிவனத்தில் டாக்டர் வீட்டிற்குள் புகுந்து 250 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள ஜெயபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் கஜேந்திரன் (வயது 58). இவர் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.

இரவு கஜேந்திரன் வழக்கம்போல் ஆஸ்பத்திரி பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்த அனைவரும் வெளியூர் சென்று விட்டனர். கஜேந்திரன் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். இரவு உணவை முடித்து விட்டு தூங்க சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் வீட்டின் சமையலறையின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த லாக்கரை எடுத்து வீட்டின் சமையலறைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து உடைத்தனர்.

பின்னர் அந்த லாக்கரில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இன்று காலையில் டாக்டர் கஜேந்திரன் வீட்டில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 250 பவுன் தங்க நகை கொள்ளை போயிருந்தன.

இது குறித்து டாக்டர் கஜேந்திரன் திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.

டாக்டர் வீட்டில் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News