செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே குடிபோதையில் தொழிலாளியை குத்திக்கொன்ற நண்பர்

Published On 2017-06-23 10:16 GMT   |   Update On 2017-06-23 10:16 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குடிபோதையில் தொழிலாளியை நண்பர் குத்திக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது46). தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் ராமதாஸ்(50). நண்பர்களான இவர்கள் இருவரும் தூத்துக்குடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வந்தனர். வேலை முடிந்ததும் தினமும் மாலையில் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை புதூர் பாண்டியாபுரத்தில் இருவரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி ராமதாசை தாக்கினார். உடனே அருகில் நின்றவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கருப்பசாமி தனது மனைவி பேச்சியம்மாள், மகள் பொன்செல்வம் ஆகியோருடன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ராமதாஸ் கருப்பசாமியுடன் மீண்டும் தகராறு செய்தார். திடீரென ராமதாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பசாமியை சரமாரியாக குத்தினார். இதை பார்த்த கருப்பசாமியின் மனைவி, மகள் தடுத்தனர். அவர்களை கீழே தள்ளிவிட்டு ராமதாஸ் கருப்பசாமியை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.

கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுபற்றி புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் டி.எஸ்.பி சீமைச்சாமி, புதியம்புத்தூர் சப்இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அங்கு கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளி ராமதாசை கைது செய்தனர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News