செய்திகள்

சேலத்தில் ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம் கேட்டு பேரம்: போக்குவரத்து தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Published On 2017-06-21 08:51 GMT   |   Update On 2017-06-21 08:51 GMT
சேலத்தில் ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்ற போலீஸ் துணை கமி‌ஷனர் உத்தரவிட்டார்.
சேலம்:

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45) ஆட்டோ டிரைவர். இவர் 5ரோட்டில் இருந்து கோரிமேட்டிற்கு தினமும் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

கடந்த 19-ந் தேதி 5 ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஆறுமுகம் ஓட்டி வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆட்டோவுக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. பின்னர் போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து போதையில் வாகனம் ஓட்டியது உள்பட 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர் வடக்கு போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் மேகவர்ணன் என்பவரிடம் வழக்கு விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு அபாரதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மேலும் ரூ.300 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த உரையாடலை ஆறுமுகம் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அதனை டி.வி. ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார்.

இந்த வீடியோ நேற்று செய்தி சேனல்களில் வெளியானது. இதுகுறித்து தலைமை காவலர் மேகவர்ணனிடம் சேலம் மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம் கேட்டது உறுதியானதையடுத்து தலைமை காவலர் மேகவர்ணனை ஆயுதப்படைக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் துணை கமி‌ஷனர் ராம கிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார், தலைமை காவலர் மேகவர்ணனை மாநகர ஆயுதப்படைக்கு மாற்ற அதிரடியாக உத்தர விட்டார். இதையடுத்து அவரை இன்று ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
Tags:    

Similar News