செய்திகள்
முசிறி அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பலி
முசிறி அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வளையுருப்பு காலனியை சேர்ந்தவர் பட்டன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 25-ந்தேதி மோட்டார் சைக்கிளில் முசிறி சாலையில் தா.பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், பட்டன் சென்ற மோட்டார் சைக்கிளும் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதில் பட்டன் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் இன்று காலை சிகிச்சை பலனின்றி பட்டன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.