செய்திகள்

தஞ்சையில் 2 வீடுகளில் 35 பவுன் நகை- ரூ.4½ லட்சம் கொள்ளை

Published On 2017-05-27 11:15 GMT   |   Update On 2017-05-27 11:15 GMT
தஞ்சையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருளானந்த நகர் 10-வது கிராஸ் பகுதியில் வசிப்பவர் இளமுருகன் (வயது 62) ஓய்வுபெற்ற பேராசிரியர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வடுவூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, ரூ.4½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இன்று வீடு திரும்பிய இளமுருகன் தனது வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை முனிசிபல் காலனியில் வசிப்பவர் ரவிச்சந்திரன். பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவர் வீட்டை பூட்டிவிட்டு கோடை சுற்றுலாவுக்கு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார்.

இன்று வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 விலை உயர்ந்த கார்களும் திருட்டு போய் இருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.

அவர் வீட்டில் சென்று பார்த்தபோது 7 கிலோ வெள்ளி பொருட்கள், 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முனிசிபல் காலனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News