செய்திகள்

பெண் விற்பனை பிரதிநிதி கொலை: வடமாநில வாலிபர் உள்பட 3 பேர் கைது

Published On 2017-05-24 10:54 GMT   |   Update On 2017-05-24 10:55 GMT
திருவண்ணாமலையில் கடனை திருப்பி கேட்ட தகராறில் பெண் விற்பனை பிரதிநிதியை கொலை செய்ய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை புதுத்தெரு 4-வது வீதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 42). இவருக்கு வரபிரசாத் (28), ரங்கபிரசாத் (25) என 2 மகன்கள் உள்ளனர்.

இருவரும் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். 2 அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்த மஞ்சுளா வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை சங்கிலி தொடர் முறையில் வாங்கி விற்கும் விற்பனை பிரதியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் வரபிரசாத் கடந்த 18-ந் தேதி முதல் தனது தாயார் மஞ்சுளாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. வீட்டின் அருகே வசிப்பவர்களை வரபிரசாத் தொடர்பு கொண்டு தாயார் குறித்து விசாரித்தார். அப்போது அவர்கள் வீடு பூட்டியிருப்பதாக தெரிவித்தனர்.

அதனால் சந்தேகம் அடைந்த வரபிரசாத் மற்றும் ரங்கபிரசாத் கடந்த 21-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து சென்றனர். அங்கு தாயார் மஞ்சுளா கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வரபிரசாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மஞ்சுளா கொலை வழக்கில் திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் தெருவை ஜெனிபர் (35), எடப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி (25) மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பவர்சிங் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பவர்சிங் திருவண்ணாமலையில் தங்கி கள்ளக்கடை வீதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்தார்.

விசாரணையில் மஞ்சுளாவிடம் ஜெனிபர் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்த பணத்தை வட்டியுடன் திருப்பி கேட்ட தகராறில் ஜெனிபர், தண்டபாணி மற்றும் பவர்சிங்குடன் சேர்ந்து மஞ்சுளாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News