செய்திகள்

பெரம்பலூர் அருகே மெக்கானிக் கொலையில் நண்பர் கைது- வாக்குமூலம்

Published On 2017-04-30 16:59 GMT   |   Update On 2017-04-30 16:59 GMT
பெரம்பலூர் அருகே மெக்கானிக் கொலையில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை அடுத்த மருவத்தூர் அருகே அய்யானூர் - கல்பாடி சாலையில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த வயலில் பெரம்பலூர் அரணாரை கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் ராஜா (35) என்பவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து ராஜாவை கொன்ற மர்ம நபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ராஜாவை கொலை செய்தது அவரது நண்பர் பெரம்பலூர் இரைய சமுத்திரத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நானும் ராஜாவும் நண்பர்கள். பெரம்பலூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் என்னையும் ராஜாவையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் நான் ஜாமீனில் வெளியே வந்தேன். ராஜா கடந்த 26-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தான்.

27 ந்தேதி இரவு 2 பேரும் மது குடிக்க மருவத்தூர் அருகே உள்ள நடராஜ் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றோம். அங்கு ஒன்றாக அமர்ந்து மது குடித்தோம். அப்போது ராஜா என்னை ஜாமீனில் எடுக்க ஏன் கால தாமதம் செய்தாய் என்று கூறி தகராறு செய்தான். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டினான்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் முதலில் இரும்பு கம்பியால் அவனது கழுத்தில் குத்தினேன். பின்னர் பீர் பாட்டிலை உடைத்து அதை வைத்து ராஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைதான ரங்கநாதன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News