செய்திகள்
ராஸ் டெய்லர்

முதல் டி 20 போட்டி - டெய்லர் அதிரடியால் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து

Published On 2019-09-02 08:22 GMT   |   Update On 2019-09-02 08:22 GMT
இலங்கைக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் ராஸ் டெய்லர் அதிரடியால் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொழும்பு:

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-1 என சமனில் முடிந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நேற்று தொடங்கியது. பல்லேகலேவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் மெண்டிசும், குசால் பெராராவும் களமிறங்கினர். குசால் பெராரா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார். அவர் 53 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இறங்கியது. அந்த அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். அந்த அணியில் காலின் டி கிராண்ட்ஹோம் 28 பந்தில் 44 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.   
 
இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஸ் டெய்லர் 29 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய மிச்செலும், சான்ட்னரும் இறுதிவரை நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் 19.3 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது.
Tags:    

Similar News