செய்திகள்

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை- வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் வெற்றி

Published On 2018-11-15 05:38 GMT   |   Update On 2018-11-15 05:38 GMT
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் வெற்றி பெற்றனர். #WomensWorldT20
கயானா:

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ’ஏ’ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 18.4 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது. தென் ஆப்பிரிக்கா முதல் தோல்வியை தழுவியது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 25 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வங்காளதேசம் 72 ரன்னில் சுருண்டது.

இலங்கை அணி பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவிடம் தோற்று இருந்தது. வங்காளதேசம் 3-வது தோல்வியை சந்தித்தது. பேட்டிங்கில் இருந்து வெளியேற்றப்பட்டது,

இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி முதல் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியுடன் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

அயர்லாந்து அணி தான் மோதிய 2 ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் 2-வது வெற்றிக்காகவும், நியூசிலாந்து முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன. #WomensWorldT20
Tags:    

Similar News