செய்திகள்

கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்- விராட் கோலி

Published On 2018-10-28 04:42 GMT   |   Update On 2018-10-28 04:42 GMT
கடைசி 10 ஓவரில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. பின்னர் 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

விராட் கோலி சதம் அடித்தும், இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா 47.4 ஓவரில் 240 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 10 ஓவரில் 72 ரன்கள் குவித்தது. இதுவே தோல்விக்கு காரணமாகிவிட்டது.

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘‘முதல் 35 ஓவர்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு பெரிய அளவில்

ஒத்துழைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் கடைசி 10

ஓவர்களில் கொஞ்சம் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்.

8 விக்கெட்டுக்கு 227 ரன்களுடன் இருந்த அவர்களை 250 முதல் 260 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். இருப்பினும் இது எடுக்கக்கூடிய இலக்குதான். சரியான பார்ட்னர்ஷிப் அமையாதது பின்னடைவை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருக்கும்போது பந்து வீச்சுக்கும் அவர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். கேதர் ஜாதவ் அடுத்த ஆட்டத்திற்கு வரும்போது அணியின் கலவை சரியானதாக அமையும்’ என்றார்.

புவனேஸ்வர் குமார் 70 ரன்களும், கலீல் அஹமது 65 ரன்களும், சாஹல் 56 ரன்களும், குல்தீப் யாதவ் 52 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். பும்ரா 35 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
Tags:    

Similar News