இந்தியா

தென் மாநிலங்களுக்கு குறைந்த நிதி ஏன்?: பிரதமர் மோடி விளக்கம்

Published On 2024-02-07 14:34 GMT   |   Update On 2024-02-07 14:34 GMT
  • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
  • அப்போது பேசிய அவர், இந்த நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் பொருத்தது என்றார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு இன்று நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் குறிப்பாக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சி பணிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை.

எத்தனையோ நெருக்கடிகள், அடக்குமுறைகள் மற்றும் பல இன்னல்களைச் சந்தித்தோம். ஒருமுறை குஜராத் மாநிலத்தில் இயற்கை பேரழிவு ஏற்பட்டது. அப்போது பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. குஜராத் பூகம்ப பாதிப்புகளைகூட அப்போது பிரதமர் பார்க்க வரவில்லை.

இயற்கை பேரிடர்களில் முதல் மந்திரியாக நான் பல கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறேன். அதனால் இன்றும் எனது தாரக மந்திரம் இந்தநாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியைப் பொருத்தது. அதனால் இந்தப் பாதையில் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்.

அதன்படி கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களுக்கு நிதி பகிர்வு கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் வளர்ச்சி தடைபட்ட மாநிலங்கள் சமநிலை பெறமுடியும் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News