இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
- பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
- அப்போது, இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.
புதுடெல்லி:
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன். இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்தும் பேசினோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதில் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன் என தெரிவித்துள்ளார்.