இந்தியா
மல்லிகார்ஜுன கார்கே

பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து: மல்லிகார்ஜுன கார்கே

Published On 2021-12-27 03:07 GMT   |   Update On 2021-12-27 03:07 GMT
தற்போது உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதனால் மோடி அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி பேசுகிறார்.
கலபுரகி :

டெல்லி மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அரசியல் சாசனத்தை மாற்ற அக்கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இதை தடுக்க வேண்டுமென்றால் மக்கள் இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

கட்டாய மதமாற்றத்தை தடுக்க ஏற்கனவே சட்டம் உள்ளது. இருப்பினும் மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்ட மசோதாவில் கர்நாடக பா.ஜனதா அரசு திருத்தம் செய்துள்ளது. இது பா.ஜனதாவின் உள்நோக்கம் வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடி சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது அதில் அவர் கலந்து கொள்வது இல்லை. அவரது கட்சியின் பிரசார கூட்டங்களில் 15 நாட்கள் வரை கலந்து கொள்கிறார்.

தற்போது உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதனால் மோடி அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி பேசுகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. இதற்கு முன்பு பரவிய கொரோனாவால் நாட்டில் 50 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால் இறப்பு எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டுகிறது. இவ்வாறு தான் மோடியின் ஆட்சி நடக்கிறது. அரசு நிகழ்ச்சிகளில் கட்சி பிரசாரம் மேற்கொள்வது முன்பு எப்போதும் நடக்கவில்லை. மோடியால் இவை எல்லாம் நடக்கிறது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
Tags:    

Similar News