செய்திகள்
கான்வாய் இடைமறித்த இளைஞர்கள் - போலீஸ் தாக்குதல் - பகீர் தகவலுடன் வைரலாகும் வீடியோ
கான்வாய் ஒன்றை இளைஞர்கள் இடைமறிப்பதும், போலீசார் அவர்களை தாக்குவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்த சம்பவங்களால் பலர் வேலை இழந்துள்ளனர். நாடு முழுக்க பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளதோடு மன உளைச்சல் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறின.
இந்நிலையில், சில இளைஞர்கள் ஒன்றுகூடி கான்வாய் முன் போராட்டத்தில் ஈடுபடுவதும் அவர்களை போலீசார் தாக்குவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கான்வாயை இடைமறித்ததாக கூறப்படுகிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த வீடியோ 2017 ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் லக்னோ பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோவில் இளைஞர்கள் கையில் கருப்பு கொடி வைத்திருக்கின்றனர்.
வைரல் வீடியோ யோகி ஆத்தியநாத் பல்கலைக்கழகம் சென்ற போது இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் இது சமீபத்திய வீடியோ இல்லை என்பதும் இதில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி போராட்டம் நடத்தவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.