என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "social media"

    • ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் போட்டு வரவழைத்தனர்.
    • பலரும் கலவையான கருத்துக்களை பதிவிட்டனர்.

    "இரவு பால்கனியில் இருந்தபடி வானத்தை ரசிப்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்... ஆனால் அப்போது பால்கனி உட்புறமாக மூடிக் கொண்டால் கதவை திறக்க முடியாத அந்த வேதனை எப்படியிருக்கும் ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்...

    அதுபோல ஒரு சம்பவம் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்துள்ளது. 2 நண்பர்கள் இரவில் பால்கனியில் பொழுதை கழித்தனர். அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றபோதுதான் பால்கனி உட்புறமாக பூட்டிக் கொண்டது தெரியவந்திருக்கிறது. வீட்டிற்குள் பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் அவர்களை எழுப்ப மனமில்லாத அவர்கள், திடீரென சாதுரியமாக செயல்பட ஆரம்பித்தார்கள்.

    அவர்கள் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் போட்டு வரவழைத்தனர். டெலிவரி செய்பவர் வீடு தேடி வந்தபோது அவரிடம் நடந்த சம்பவத்தை விளக்கி கூறி மாற்றுச்சாவி இருக்கும் இடத்தை சொல்லி அதன் மூலம் கதவைத் திறந்து பால்கனியில் இருந்து விடுதலை பெற்றனர்.

    அவர்கள் மாடியில் இருந்து டெலிவரி ஊழியரை வரவேற்பது, அவரிடம் நிலைமையை விளக்கிச் சொல்வது, தங்களை மீட்டதும் அவருக்கு நன்றி சொல்லி சிரிப்பது போன்ற காட்சியுடனான வீடியோவை மிஹிர் கஹுகர் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார், அவரது வீடியோ விரைவாக வைரலானது. பலரும் அவர்களது செயலுக்கு கலவையான கருத்துக்களை பதிவிட்டனர்.



    • பெரிய கத்திரிக்கா, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டார்.
    • பலரும் நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டனர்.

    சமூக வலைதளங்களில் எப்படியாவது பிரபலமடைந்து விடவேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் அதிகரித்து வருகிறது. அதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு பலர் சென்றுவிடுகிறார்கள். அதற்கு திருத்தணி தாக்குதல் சம்பவம் ஒரு உதாரணம்.

    அதற்கு நேர்மாறாக முற்றிலும் வேடிக்கையாக, ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் அந்த வாலிபர். திடீரென அவர் பையில் இருந்து தக்காளி சாஸ் பாக்கெட்டை எடுக்கிறார். அவர் ஏதோ சிற்றுண்டி சாப்பிடப் போகிறார் என்று சக பயணிகள் நினைத்தபோது அவர் முழு இஞ்சியை எடுத்து அதில் சாஸை ஊற்றி சாப்பிட்டார். அடுத்து ஒரு டீயை வாங்கியவர் அதில் வாழைப்பழத்தை தொட்டு சாப்பிட்டார். அதேபோல் பெரிய கத்திரிக்கா, முட்டைகோஸ் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டார். இதனால் சக பயணிகள் அவரை வியப்புடன் பார்த்தனர். சிலர் சற்று முகம் சுளித்தனர்.

    சமூக வலைதளங்களில் வெளியான அவரது வீடியோ, லட்சக்கணக்கானோரின் பார்வைகளையும், விருப்பங்களையும் பெற்றது. பலரும் நகைச்சுவை கருத்துகளை பதிவிட்டனர்.



    • புத்தாண்டு அன்று நண்பர்கள் குழு ஒரு வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளனர்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி ஏராளமானோரின் பார்வைகளையும் பெற்று வருகிறது.

    ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்பவர்கள் நேரமும், சூழலும் பாராமல் வாடிக்கையாளருக்கு குறித்த நேரத்தில் பொருட்களை ஒப்படைக்க போராடுவார்கள். அதை பலரும் உணர்ந்து கொள்ளாமல் டெலிவரிபாய் என்று ஏளனமாக நினைப்பார்கள், அல்லது டிப்ஸ் எதிர்பார்ப்பார்கள் என்று சில்லறைகளை கொடுத்து அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் அவர்களும் மனிதர்கள், உழைப்பாளிகள் என்று நட்புடன் கொடுக்கப்படும் மரியாதை அவர்களை நெகிழச் செய்கிறது. அதுபோன்ற நிகழ்வு பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    புத்தாண்டு அன்று நண்பர்கள் குழு ஒரு வீட்டிலிருந்து ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்த உணவை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த நபர் டெலிவரி செய்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் டெலிவரி ஊழியரையும் சேர்த்துக் கொண்டனர்.

    முதலில் கூச்சப்பட்டு தயங்கிய அந்த நபரை, ஒருவர் ஓடி வந்து தூக்கி நட்புடன் செயல்பட ஆரம்பித்ததும், அந்த நபரும் சந்தோஷமாக அவர்களுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கெடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ஏராளமானோரின் பார்வைகளையும் பெற்று வருகிறது.



    • சமூக வலைதளங்களில் செய்திகளைப் பார்க்க, கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் கசிவு, தவறான தகவல் பரவல், சைபர் உளவு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களைப் பாதுகாப்பதற்காக காலத்திற்கு ஏற்ப விதிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராணுவத்தினர் இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் செய்திகளைப் பார்க்கவும், கண்காணிக்கவும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

    ராணுவ நடவடிக்கைகள், படை நகர்வு, பயிற்சி விவரங்கள், ஆயுதங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட அதிகாரபூர்வ அல்லது உள்துறை தகவல்கள் தவறுதலாக கூட வெளியாவதைத் தடுக்கவே இந்த முடிவு என தெரிவித்துள்ளது.

    • கடையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த கடை மேலும் பிரபலமானது.
    • ஆண்கள் தரப்பில் இருந்து கண்டன கருத்துக்களும் பதிவிடப்பட்டது.

    தெருவோர கடையில் அலைமோதுகிறது பெண்கள் கூட்டம். வழக்கமாக பெண்கள் டீ கடைகளிலோ, தெருவோர ஓட்டல்களிலோ ஆண்களுக்கு நிகராக நின்று சுதந்திரமாக பேசி சிரித்தபடி சாப்பிடமாட்டார்கள். ஆனால் இந்த கடையில் மட்டும் அவர்கள் சிரித்தபடி பானிபூரியை ருசிக்கிறார்கள். காரணம் அந்த கடையில் வைக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான பெயர் பலகைதான். "ஆண்கள் யாருக்கும் அனுமதி கிடையாது" என்று எழுதப்பட்டிருப்பதால் பெண்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள்.

    சிலர், அந்த கடையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த கடை மேலும் பிரபலமானது. பலர் பாராட்டினாலும், ஆண்கள் தரப்பில் இருந்து கண்டன கருத்துக்களும் பதிவிடப்பட்டது. ''அந்த பானிப்பூரியை விற்பவரே ஒரு ஆண்தானே'' என்று ஒருவர் எழுதியிருந்தார். இதுகுறித்த வீடியோ பல லட்சம் பேரால் பார்வையிடப்பட்டு உள்ளது.



    • ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண்ணால் கீழே இறங்க முடியவில்லை.
    • குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தை சேர்ந்த திருமணமான ஒருவர், மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இருவரும் பலமுறை நேரில் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.

    சம்பவத்தன்று காதலன் வீட்டுக்கே சென்று அந்த இளம்பெண் ஜாலியாக இருந்துள்ளார். இந்த வீடு அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்துள்ளது. காதலர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அந்த நபரின் மனைவி திடீரென்று வீட்டிற்குள் வந்துள்ளார்.

    இதனால் பதறிப்போன கணவர், தனது காதலியை வெளிப்புற பால்கனியில் ஒளிந்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இதனால் காதலி பதற்றம் அடைந்தார். காதலனின் மனைவி பால்கனிக்கு வந்து விட்டால் நாம் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், காதலி பால்கனியின் மேல் பகுதியில் இருந்து, கீழே உள்ள வீட்டின் பால்கனி நோக்கி இறங்க ஆரம்பித்தார்.

    அங்குள்ள 10-வது மாடியில் இருந்து குழாய் பைப்பை பிடித்து இறங்கினார். இதை அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண்ணால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் கீழே இருக்கும் வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்டுள்ளார். உடனே அந்த வீட்டில் இருந்தவர், வீட்டுக்குள் பாதுகாப்பாக இழுத்து, அந்த பெண்ணை பத்திரமாக மீட்டார். இதனை அங்குள்ள குடியிருப்பு வாசிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த ஒரு பயனர், இந்த பெண் ஸ்பைடர்மேன் குரூப்பில் சேர்ந்து கொள்ளலாம் போலயே? என்று கிண்டலாக பதிவிட்டார்.

    மற்றொருவர், இதில் திருப்பம் என்னவென்றால் இந்த பெண்ணை காப்பாற்றிய நபரே அந்த கணவரின் மனைவியிடம் அவள் இங்கேதான் இருக்கார் என்று சொல்லி இருப்பார் போல என பதிவிட்டுள்ளார்.

    சில நெட்டிசன்கள், ஒரு ஆணுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பது சரியல்ல. ஒருத்தனுக்காக உயிரையே ஆபத்தில் விட வேண்டிய அவசியமில்லை. இப்படி ஆபத்தில் விட்டுவிட்டு, தன் மனைவிக்காக வாழ்பவனை நீ உதறி தள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

    • கடந்த ஒருவாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
    • மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    முக்கிய தருணத்தில் சிலர் சமயோசிதமாக செயல்பட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். அப்படி ஒரு ஆட்டோ டிரைவரின் செயல் சமூக வலைத்தளத்தில் பாராட்டை குவித்து வருகிறது.

    கடந்த ஒருவாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்கிடையே மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் தனது ஆட்டோவை இண்டிகோ விமானம் போல் மாற்றி அமைத்து கவனம் பெற்றார். அவரது ஆட்டோ பலரின் விருப்பங்களை பெற்று கூடுதல் சவாரிகளை பெற்றுக்கொடுத்தது. அவர் ஆட்டோ இயக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியும் வைரலானது. இருந்தாலும், இந்த வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து பதிவிட்டனர்.



    • சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
    • ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

    உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

    இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024 என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்தச் சட்டம் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு வந்தது.

    ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஸ்நாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் ஊடகங்களை பயன்படுத்த தடை. மீறி அவர்களுக்கு கணக்கு உருவாக்க அனுமதித்தால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு ரூ.296 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.

    • ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அமெரிக்காவில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த மக்கள், 79 வயதான டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை இந்த வீடியோ காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். 



    • 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.
    • மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.

    ரஷியாவின் ஷ்யாவின் ஓரன்பர்க் நகரைச் சேர்ந்த 30 வயதான டிமிட்ரி நுயான்சின், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் சமூக ஊடகங்க பிரபலமாகவும் உள்ளார்.

    தனது எடை இழப்புத் திட்டத்தை விளம்பரப்படுத்த, அவர் 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.

    இதன் ஒரு பகுதியாக, சில வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் 10,000 கலோரிகளுக்கு மேல் ஜங்க் ஃபுட் சாப்பிடத் தொடங்கினார்.

    காலையில் பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள், மதியம் மயோனைஸுடன் பாலாடைக்கட்டிகள், இரவில் ஒரு பர்கர் மற்றும் இரண்டு சிறிய பீட்சாக்கள் சாப்பிடுவார்.

    இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த மாதம் 18 ஆம் தேதி தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.

    இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது நண்பர்களிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தனது பயிற்சி வகுப்புகளை ரத்து செய்வதாகவும் கூறினார். ஆனால் மறுநாள் அவர் தூக்கத்தில் மாரடைப்பால் இறந்தார். 

    • இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார்.
    • இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார்.

    பொதுவாக நமக்கு நெருங்கியவர்களின் பிறந்தநாளில் அவர்களுக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியூட்டும் விதமாக திடீரென வாழ்த்து தெரிவிப்போம். அந்த வகையில் கணவர் ஒருவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு அவருக்கு தெரியாமல் முன்கூட்டியே பிரிட்ஜில் கேக் வாங்கி வைத்தார்.

    இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார். இவரது மனைவியோ இரவு 9½ மணிக்கே தூங்கிவிட்டார். பின்னர் இவரும் செல்போனில் படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டார்.

    இதையடுத்து இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார். இந்நிலையில் காலையில் எழுந்து பிரிட்ஜை திறந்த மனைவிக்கு கேக்கை பார்த்ததும் அதிர்ச்சி. அப்போது அவர் கோபப்படாமல் சிரித்தபடி கணவர் தனக்காக செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். இதையடுத்து கேக் வெட்டுவதுபோன்ற வீடியோ எடுத்து தனது கணவருக்கு காண்பித்தார்.

    இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்று வைரலாகி வருகிறது.



    • ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிற்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.

    இச்சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவர்களின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஸ்மிருதியின் காதலர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் முச்சலுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டதாகவும், இசிஜி உட்பட பிற சோதனைகள் செய்யப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாகவும், ஆனால் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்தார். திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்தாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமூக வலைதளங்களில் இருந்து திருமண புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை நீக்கியுள்ளார்.

    தந்தை மற்றும் மணமகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருமணம் நின்ற நிலையில், சமூக வலைதள பதிவுகள் நீக்கம் செய்துள்ளார்.

    ×