செய்திகள்
அமித் ‌ஷா

கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியலா?: காங்கிரஸ் கட்சிக்கு அமித் ‌ஷா கண்டனம்

Published On 2020-04-03 04:09 GMT   |   Update On 2020-04-03 04:09 GMT
கொரோனா வைரஸ் பிரச்சினையிலும் அற்ப அரசியல் நடத்துவதா என கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு அமித்‌ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :

டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம், காணொலி காட்சி வழியாக நடந்தது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசை தாக்கிப்பேசினார்.

அப்போது அவர், திட்டமிடாமல் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது, இந்தியாவில் உள்ள லட்சோப லட்சம் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வில் குழப்பத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

21 நாள் ஊரடங்கு பிரச்சினையை சோனியா காந்தி அரசியலாக்கி இருப்பதற்கு பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்‌ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் முயற்சிகள் உள்நாட்டிலும், உலக அளவிலும் பாராட்டப்படுகின்றன.

கொரோனா வைரசை வீழ்த்துவதில் நாட்டின் 130 கோடி மக்களும் ஒன்றுபட்டுள்ளனர்.

ஆனாலும் கூட, காங்கிரஸ் கட்சி அற்ப அரசியல் விளையாட்டு நடத்துகிறது. நாட்டு நலனை கருத்தில் கொண்டு, மக்களை தவறாக வழிநடத்துவதை அந்த கட்சி நிறுத்த வேண்டிய அவசரமான தருணம் இது.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News