செய்திகள்
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் கைது

Published On 2019-09-12 11:07 GMT   |   Update On 2019-09-12 11:07 GMT
காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்:

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சமீப காலமாக அதிகளவில் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டு அவர்கள் ஊடுருவி இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லைப் பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, எல்லையில் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் லாரி ஒன்று சிக்கியுள்ளதாக கத்துவா மாவட்ட எஸ்எஸ்பி தெரிவித்தார்.

4 ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 6 மேகசின் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், லாரியில் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் என தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட அந்த ஆயுதங்கள் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News