செய்திகள்
பாராளுமன்றம்

26-ந்தேதி நிறைவு பெறுவதாக இருந்த பாராளுமன்ற கூட்டத்தை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க திட்டம்

Published On 2019-07-20 06:31 GMT   |   Update On 2019-07-20 06:31 GMT
பாராளுமன்ற கூட்டம் 26-ந்தேதி நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் கூட்டத்தை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் முடிந்து நாட்டின் 17-வது பாராளுமன்ற அவை உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட்டுக்கான பாராளுமன்ற கூட்டம் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. முதலில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் நடந்தது. ஓம்பிர்லா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் 2-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூட்டு அவையில் உரை நிகழ்த்தினார்.

அதன்பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேசினார்கள். பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன.

பாராளுமன்ற கூட்டத்தை வருகிற 26-ந்தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மேலும் 3 நாட்கள் கூட்டத்தை நீட்டிக்க இப்போது முடிவு செய்துள்ளனர்.

இதுசம்பந்தமாக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகளுடன் பேசி கூட்டத்தை நீட்டிக்க அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படும்.

முத்தலாக் மசோதா, புதிய வாகன சட்ட மசோதா போன்ற பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கு வசதியாக கூட்டத்தை 3 நாள் நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர்.

வழக்கமான பாராளுமன்ற நிகழ்வுகளை ஒப்பிடும்போது இந்த கூட்டம் அதிக நேரம் நடந்துள்ளது. அதாவது சராசரி அளவை ஒப்பிடும் போது 128 சதவீதம் கூட்டம் நடந்துள்ளது. பல்வேறு விவாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டில் இந்த கூட்டம் தான் அதிக நேரம் நடத்தப்பட்டுள்ளது. 2 தடவை அலுவல் பணிகளை நீடிக்க நள்ளிரவு வரையிலும் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News