செய்திகள்
பப்ஜி விளையாடியதை தடுத்த அண்ணனை குத்திக் கொன்ற 15 வயது சிறுவன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பப்ஜி விளையாடியதை தடுத்தற்காக உடன்பிறந்த அண்ணனை 15 வயது சிறுவன் இன்று கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தின் பிவான்டி பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஷேக்(19). இவரது 15 வயது தம்பி எந்நேரமும் தனது செல்போனை எடுத்து பப்ஜி கேம்ஸ் விளையாடுவதை கண்டு ஆத்திரமடைந்த முஹம்மது ஷேக், இன்று காலை அவனை கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் உடன்பிறந்த அண்ணன் என்றும் பாராமல் முஹம்மது ஷேக் மீது பாய்ந்தான். அவரை தாக்கி தலையை பிடித்து சுவற்றின்மீது மோதி காயப்படுத்தினான்.
இதிலும் ஆத்திரம் தணியாமல் வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து சரமாரியாக குத்தினான். இதில் பலத்த காயமடைந்த முஹம்மது ஷேக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பிடிபட்ட சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.