செய்திகள்
பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளது.
புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு, விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தார்.
பிரதமராக 2-வது முறையாக மோடி பதவியேற்றபோது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது மீண்டும் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.