செய்திகள்

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

Published On 2018-10-02 09:47 GMT   |   Update On 2018-10-02 09:47 GMT
டெல்லி எல்லைக்குள் நுழைய முடியாமல் போராடிவரும் வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். #RajnathSingh #Delhifarmerprotests #KisanKrantiPadyatra
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் 'கிசான் கிராந்தி' என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.
 
இன்று இந்த பேரணி காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப்பிரதேசம்  - டெல்லி எல்லைப்பகுதியை வந்தடைந்தது.  டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் அதிரப்படை போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தடுப்பு வேலிகளை டிராக்டர்களால் மோதி தடையை மீற முயன்றனர். அவர்கள் கலைந்து செல்வதற்காக  போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.


இதற்கிடையில், இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வேளாண்மைத்துறை இணை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசாரின் நடவடிக்கைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #RajnathSingh #Delhifarmerprotests #KisanKrantiPadyatra
Tags:    

Similar News